இணுவிலில் கிளைமோர்: இளைஞன் காயம்இணுவிலில் இன்று காலை கிளைமோர் வெடித்ததில் இளைஞர் ஒருவரின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டன என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காலை 9. 00 மணியளவில் இந்தச் சம்பவம் காரைக்கால் சிவன்கோவிலுக்கு அண்மையாக இடம்பெற்றுள்ளது.
காலையில் வீதியால் வந்த இளைஞரே கிளைமோருக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்த இளைஞர் வீதியில் மயக்கமுற்ற நிலையில் இரத்தப் வெள்ளத்தில் கிடந்தார் எனவும் -
கிளைமோர் வெடித்த சத்தத்தைக்கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த படையினர் அந்த இளைஞரைக் கொண்டு சென்றனர் என்றும் - அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோரை எடுக்க முற்பட்ட வேளையே அது வெடித்தது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். பக்கச்சார்பற்ற தகவல்கள் இதனை ஊர்ஜிதப்படுத்தவில்லை.
அராலி இந்துக் கல்லூரி சம்பியன்சங்கானை கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 16 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் அராலி இந்துக் கல்லூரி சம்பியனாகியுள்ளது.
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மைதானத்தில் சங்கானை கல்விக்கோட்ட பணிப்பாளர் துரை எங்கரசு தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் அராலி இந்துக் கல்லூரியும் மோதின.
முதல் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி ஒரு கோலைப் பெற்று முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் அராலி இந்துக் கல்லூரி 16 வயதுப் பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியை 01 க்கு 00 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டு சங்கானைக்கோட்ட சம்பியனாகியது.
முறைகேடான ஆட்டம்18 வயதுப் பிரிவினருக்கான இறுதிப் போட்டியில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியும் அராலி இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவுபெற்றது.
முதல் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி வீரர்கள் இருவர் தமது மேலங்கியை கழற்றி மைதானத்தில் சுழற்றியமைக்காக மத்தியஸ்தரினால் மஞ்சல் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி வீரர்கள் இருவர் ஒரே சமயத்தில் தண்டனை எல்லைப் பகுதிக்குள் முறைகேடாக விளையாடினர். எதிரணி வீரரை அவர்களில் ஒருவர் காலால் உதைக்க மற்றவர் பந்தை கையால் தட்டினார்.
இதனை அவதானித்த மத்தியஸ்தர் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி அணிக்கு தண்டனை உதைக்குரிய வாய்ப்பை அளித்தார். அதனை ஏற்க்க மறுத்த அராலி இந்துக் கல்லூரி அணியினர் தொடர்ந்து விளையாடவும் எதிர்ப்புத் தெரிவித்து மைதானத்தில் இருந்தனர். இதனை அடுத்து ஆட்டம் முடிவடைந்ததாக அறிவித்த நடுவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் 18 வயதுப் பிரிவினருக்கான கேடயத்தை வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிக்கு பிரதம விருந்தினர் ஓய்வுபெற்ற தென்மராட்சி உடற்கல்விப் உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.லோகநாதன் வழங்கி கௌரவித்தார்.
சித்தன்கோணியில் தொடர் பதற்றம்சித்தன்கேணிச் சந்தியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைத் அடுத்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான நிலைமை இன்றுடன் மூன்றாவது நாளாகவும் காணப்படுகின்றது.
அந்தப் பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வீதியால் செல்லும் வாகணங்களை மறிப்பதும் இளைஞர்களைத் தாக்குவதுமாக அராஜகம் செய்தபடி இருக்கின்றனர் குறிப்பாக வர்த்தக நிலையங்கள் முழுமையாகத் திறந்து இயங்காத நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. அத்துடன் வீதியால் செல்லும் பொதுமக்கள், அரச ஊழியர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரையும் வீதியில் உள்ள புற்கள் பற்றைகளைத் துப்புரவு செய்யும்படியும் மரங்களை வெட்டும்படியும் வற்புறுத்தி வேலை வாங்கி வருகின்றனர் இராணுவத்தினர்.
இதன் காரணமாக பலரும் பிரதான வீதிகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து ஒழுங்கைகள் ஊடாக பயணம் செய்து வருகின்றார்கள். இதையறிந்து தற்போது சங்கானை டச்சு வீதியிலும் இராணுவத்தினர் நின்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்த வீதியால் செல்லும் மக்கள் அவ்வப்போது தாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினர் விபரம் பெற்ற பின்னரே யாழ்ப்பாணத்தில் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல்யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களது குடும்ப விபரங்கள், ஆதரிக்கும் கட்சி, தொலைபேசி இலக்கம், கல்வித்தகமை, தொழில் போன்ற விபரங்களை அண்மையில் இராணுவத்தினர் பெற்ற பின்னரே மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சட்டத்தரனிகளுக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுகின்றன என்றும் -
கப்பம் கேட்டல் மற்றும் கொலைப் பயமுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் - பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ். மாவட்ட சட்டத்தரனிகள் கடந்த வாரம் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டார்கள். எனினும் இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றக் கடமைக்குத் திரும்பியுள்ளனர். இருந்தபோதிலும் தமக்கு எந்தநேரமும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற ஆதங்கத்துடனேயே அவர்கள் இருக்கிறார்கள்.