Friday, October 12, 2007

மனித உரிமைகளுக்கான தூதுவருக்கு
யாழில் கண்ணீர்க் கதறல் வரவேற்பு


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தூதர் லூயிஸ் ஆர்பர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மற்றும் கதறலுடன் கூடிய வரவேற்பை அளித்தனர்.

லூயிஸ் ஆர்பர் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐநா தூதரகத்திற்கு முதலில் வருகை தந்தார். யாழ் குடாநாட்டில் காணாமல்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் உறவினர்கள் கதறி அழுத வண்ணம் அவரை வரவேற்றார்கள்.

காலையில் அந்த இடத்திற்கு வந்து கூடிய மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவதற்கு இராணுவத்தினர் தம்மாலியன்ற முழுப் பணிகளையும் மேற்கொண்டனர். ஐநா தூதரிடம் பொதுமக்கள் தமது குறைகளைக் கூறமுயன்ற போதிலும் படையினரின் பலத்த தடைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. படையினரின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து போகாமல் திடமுடன் நின்ற மக்கள் தூதுவரைச் சந்தித்து தமது வேதனைகளை அவருக்கு எடுத்துக் கூறினர்.

இதேவேளை யாழ்ப்பாணம் பேராயர் இல்லத்தில் நடைபெறவிருந்த சந்திப்பில் யாழ் மக்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் மதத்தலைவர்கள் தவிர்ந்த யாரும் குறிப்பிட்ட இடத்திற்கு அண்மையில் செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணத்தில் சோதனைகள் அதிகரிப்பு


யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்று இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் மிகவும் அதிகமாகக் காணப்பட்டன. வழமைக்கு மாறாக, முலைவைச் சந்தி உதயன் சந்தி கொன்மன்ற் சந்தி கொட்டடிச் சந்தி இலுப்பையடிச் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் பேராயர் இல்லத்தை சூழவுள்ள பிரதான வீதிகள் உட்பட நகரிலுள்ள அனைத்துச் சிறு வீதிகளிலும் திடீர் சோதனைத் தடைகள் அமைத்து பொதுமக்கள் சோதனையிடப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் அணியினர் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் நின்று இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டார்கள் இதனால் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொது மகக்ளின் நடமாட்டம் மிகவும் குறைவாகக் காணப்பட்டது.

பேராயர் இல்லப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் யாரையும் அனமதிக்கவில்லை. இதேவேளை செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களும் அங்கு நின்ற படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

ஐநா மனித உரிமைகளுக்கான தூதர் வருகையைஒட்டி யாரும் அவரைச் சந்திக்கவிடாமல் தடுக்கும் முகமாக இத்தகைய நடவடிக்கையை படைத்தரப்பினர் மேற்கொண்டனர்.

இராணுவ மோட்டார் சைக்கிள் மோதி
அப்பாவி இளைஞர் படுகாயம்

சுன்னாகத்தில் நேற்று மாலை இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதியதில் இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
ஏழாலை தம்புவத்தையைச் சேர்ந்த அரியநாயகம் சயீதரன் (28) என்ற இளைஞரே காயமடைந்தவராவார்.

சுன்னாகம் பிரதேச சபையின் ஏழாலை உப பணியகத்தில் கடமையாற்றுகின்ற இவர், மோட்டார் சைக்கிளில் தனது அலுவலகத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது விபத்து நிகழ்ந்தது. வேகமாக வந்த அதிரடிப் படையினரின் மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதி அவரது மோட்டார் சைக்கிளைத் தூக்கி எறிந்தது.

படுகாயமடைந்த சயீதரன் உடனடியாக அங்கிருந்தவர்களினால் தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டார். விபத்துக்குக் காரணமான அதிரடிப்படையினர் அங்கிருந்து ஓடித் தப்பி விட்டனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments: