வேலணையில் ஒருவர் பலி
இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வேலணையில் ஓருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
வேலணை மேற்கைச் சேர்ந்த நடராசா ரவீந்திரன் (40) என்பவரே பலியான குடும்பஸ்தர் ஆவார். இவருடைய கொலைக்கான காரணம் குறித்த விசாரணையை ஊர்காவற்துறைப் காவற்றுறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.
ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது.
சரணடையும் சம்பவங்கள் தொடர்கின்றன
யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்றும் மூவர் சரணடைந்துள்ளனர். இனம் தெரியாதவர்கள் விடுத்த உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே இவர்கள் சரணடைந்துள்ளார்கள் என்று ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மராட்சி, வலிகாம் பகுதிகளைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களே இப்படிச் சரணடைந்துள்ளார்கள். அவர்கள் மனித உரிமைகள் அலுவலக ஊழியர்களினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களைப் பாதுகாப்புக்காக காவலில் வைப்பதற்கு யாழ். காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.
கடந்த சில வாரங்களாக தென்மராட்சிப் பகுதியில் இருந்து யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைபவர்களின் எண்ணிககை அதிகரித்துக் கொண்டுசெல்கின்றது.
சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டன
கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களில் கிராம அலுவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்ட சடலங்கள் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பொலிகண்டிப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டார் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்ட சடலம் தும்பளையைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான விஜயரெட்னம் விஜயகாந் என்பவருடையது என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சடலத்தை அவர்கள் பொறுப்பேற்று எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேபோன்று சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டதாகக் கூறி ஒப்படைக்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான லொறிச் சாரதி பத்மநாதன் பத்மலோகன் (30) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாதவர்களினால் யாழ். பஸ் நிலையப் பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை இவர் கடத்திச் செல்லப்பட்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். காவல் நிலையத்திலும் இது தொடர்பாக அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment